சென்னை: 3ம் வகுப்பு மாணவி பலாத்காரம் - யோகா ஆசிரியர் கைது
சென்னை: சென்னையில் யோகா பயிற்சிக்கு சென்ற மூன்றாம் வகுப்பு மாணவியை தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. சிறுமியை சீரழித்த ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோடம்பாக்கம் டெய்லர்ஸ் அவென்யூ கார்டன் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் மரியா ஞானராஜ்,(வயது 45). இவர் அரும்பாக்கம் அன்னை சத்யா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கம்யூட்டர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மாலையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து வந்தார்.

அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஜேம்ஸ் ஞானராஜிடம் யோகா பயிற்சி பெற்று வருகிறார். அந்த சிறுமிக்கு ஜேம்ஸ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி அந்த சிறுமி யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜேம்ஸ் திங்கட்கிழமையன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயாரிடம் கூறினார். உடனே சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் அழைத்து சென்றார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து பெற்றோர் விசாரிக்கவே, நடந்த விசயத்தை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் தந்தை, அண்ணாநகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜேம்ஸ் ஞானராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications