தாலி அகற்றும் போராட்டத்தில் பங்கேற்க செல்போன் மூலம் முன்பதிவு: தி.க. அறிவிப்பு
சென்னை: தாலி அகற்றும் போராட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செல்போன் மூலமாகவும் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்யலாம் என திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தாலி அகற்றும் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த போராட்டத்திற்கு இந்து அமைப்புகள், பாஜக ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிராக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட 10 இந்து அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.
மேலும் தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிராக அயனாவரம், வேப்பேரி, தலைமைச் செயலக காலனி காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் குறித்து திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந் தேதி அன்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சி விழாவில் பங்கேற்று தாலியை அகற்றிக் கொள்ள விரும்புவோர் செல்போனில் முன்பதிவு செய்தல் அவசியமாகும். முன்பதிவு செய்ய விரும்புவோர் 99403 48533, 98412 63955 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொள்ள செல்போன் மூலம் இதுவரை 7 பெண்கள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications