மக்கள் பிரச்சினை குறித்து பேசத்தான் டெல்லி போனாராம் விஜயகாந்த்..!

மனைவி பிரேமலதா, கட்சி எம்.எல்.ஏக்களுடன் திடீரென டெல்லி புறப்பட்டுப் போன விஜயகாந்த், அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நீங்கள் முதல்வரானால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடுமே என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக முகம் நிறைய பூரிப்பு பிளஸ் சிரிப்புடன் கூறினார்.
அதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்திக்க திட்டம் போட்டு டெல்லியிலேயே தங்கியிருந்தார். ஆனால் மூன்று பேரிடமிருந்தும் எந்தத் தகவலும் வரவில்லை. யாருமே விஜயகாந்த்தைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதை சத்தியமாக விஜயகாந்த் எதிர்பார்க்கவில்லை. இதனால் அப்செட்டான அவர் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் தாறுமாறாக எகிறிக் குதித்தார் விஜயகாந்த் என்பதால் நேற்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாகவே கேள்விகளைக் கேட்டனர்.
டெல்லி பயணம் குறித்து விஜயகாந்த் அவர்களிடம் கூறுகையில்,
டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்களின் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக சென்றேன். கூட்டணி சம்பந்தமாக சந்திக்க செல்லவில்லை. பிரதமரை சந்தித்து பேசியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பிரதமரிடம் கூட்டணி சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.
கூட்டணி தொடர்பாக நான் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி பற்றி நான் முடிவு செய்திருந்தால் அதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. முடிவு செய்த அடுத்த நிமிடமே உங்களை அழைத்து பகிரங்கமாக அறிவிப்பேன்.
நான் டெல்லி சென்றது தமிழக மக்கள் பிரச்சினை குறித்து பேசத்தான். கூட்டணி பேச இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும், வேறு யாராவது இருந்தாலும் தமிழக மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார் விஜயகாந்த். வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications