ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி !
ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்பப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ம் தேதி இரவு சிகிச்சைப்பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என ஏரளாமானோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் - ரெஜூலா ப்ரீத்தி தம்பதியினருக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடி வந்திருந்தனர். அவர்களது உறவினர்களும் உடன்வந்திருந்தனர். இதையடுத்து ஜெயலலிதா சமாதி முன்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மலர் தூவி உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.