காதல் தகராறில் கும்பல் வெறி- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடிய வாலிபர் மீட்பு!
உக்கடம்: காதல் தகராறில் கொடூரமாக தாக்கப்பட்டு கோவை உக்கடம் மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் மேம்பாலத்தின் கீழே 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 'போலே' எனத் தெரியவந்துள்ளது. அவர் கேரளாவில் வேலைபார்த்த போது காதல் பிரச்சினையில் சிக்கி ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது கேரளாவில் வேலைபார்த்த இடத்தில் பணக்கார பெண் யாராவது இவரது காதல் வலையில் விழுந்திருக்கலாம். இந்த காதல் விவகாரம் வெளியே தெரியவரவே அந்த பெண்ணின் உறவினர்கள் போலேவை தாக்கி காரில் கடத்தி வந்து பாலத்தில் இருந்து வீசிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேக்கின்றனர்.