அடப்பாவமே.. காதலிக்கு திருமணம்.. கல்யாண மண்டபத்தின் முன்பு தீக்குளித்து இறந்த காதலன்!
காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
Recommended Video
வந்தவாசி: தான் விரும்பிய பெண் இன்னொருத்தரை மணம் முடிப்பதை விரும்பாத காதலன் தன் காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்தவர் சந்துரு. வயது 28. ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தான் வசித்த பீர்க்கன்கரணை பகுதியில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொண்டு இனிமையாக வாழ வேண்டும் என்று கனவுகளை கண்டுவந்தார்.
ஆனால் அந்த பெண் வீட்டாரோ, வந்தவாசியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு அந்த பெண்ணை மணம் முடிக்க பேசி முடித்து விட்டனர். அவர்கள் இருவருக்கும் கடந்த 2-ம் தேதி திருமணமும் முடிவானது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வந்தது. இந்த தகவல் காதலன் சந்துருவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருமண நாளான 2-ம் தேதி அதிகாலையிலேயே திருமண மண்டபத்திற்கு வந்தார்.
திருமண மண்டபத்தின் முன் நின்ற சந்துரு, திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தனக்குதானே தீ வைத்து கொண்டார். சந்துரு அலறியதையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து, அவரை மீட்டு வந்தவாசி மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சந்துரு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துரு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாலும், 2-ம் தேதி அந்த பெண்ணுக்கு திருமணம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது.