திருமணம் செய்வதாக கூறி போலீஸ்காரர் சீரழித்துவிட்டார்: ராமநாதபுரம் சிறை முன்பு இளம்பெண் தர்ணா
ராமநாதபுரம்: சிறைக் காவலர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் ராமநாதபுரம் சிறை முன்பு திடீர் என தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி நத்தம்ரோடு வடிவேல்ஆசாரி கம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியம். அவரது மகள் யூஜிலின்மேரி. அவர் திடீர் என கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா, கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்தையா மகன் அருண்குமாரும், நானும் காதலித்தோம். அவர் திண்டுக்கலில் சிறைக்காவலராக இருந்தபோது நாங்கள் காதலித்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
இதையடுத்து அவர் மீது திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் அவர் மீது இன்னும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரது உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியும் பலனில்லை. இந்நிலையில் அவர் ராமநாதபுரம் சிறைக்கு மாற்றலாகி வந்துவிட்டார். அதனால் தான் நியாயம் கேட்டு தர்ணா இருக்கிறேன் என்றார்.
இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சம்பவ இடத்திற்கு வந்து மேரியிடம் விசாரித்து அருண்குமார் மீது அவரது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அருண்குமார் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இதையடுத்து மேரி தனது தந்தையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications