சிகிச்சைக்கு பணமில்லை... தன்னை கருணைக்கொலை செய்திடுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுவன்
வேலூர்: சிகிச்சைக்குப் போதிய பணமில்லை எனக் கூறி தன்னை கருணை கொலை செய்யுமாறு 17 வயது சிறுவன் ஒருவன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வேலூர் அருகே புகாட்பாடியைச் சேர்ந்த சக்திவேல் (17) என்ற சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். இந்நிலையில் இன்று தனது தாயாருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சக்திவேல், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் மனு ஒன்றை அளித்தான்.
அதில், புற்று நோயால் கடந்த ஓர் ஆண்டாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சக்திவேல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லை என்றும், தமது நிலையைக் கண்டு குடும்பத்தினர் மிகவும் வருந்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளான்.
மேலும், தம்மை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு ஆட்சியரிடம் சக்திவேல் வேண்டுகோள் விடுத்தான்.
சக்திவேலிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, ‘உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துள்ளார்.