பேய் பயத்தில் காதலியைக் கொன்று புதைத்த இடத்தில் பூஜை: காதலன் நண்பர்களோடு கைது
நாகை: நாகையில் பேயாக வந்து மிரட்டுவாளோ என்ற பயத்தில் காதலியைக் கொன்று புதைத்த இடத்தில் 16ம் நாள் பூஜை செய்த காதலனையும், அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் காரைக்குளத்தில் உள்ள காலிமனையில் கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று பூ, ஊதுபத்தி, வளையல், ரிப்பன் ஆகியவற்றை வைத்து யாரோ பூஜை செய்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தப் போலீசார் பூஜை செய்யப் பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்துள்ளனர். அங்கு இளம்பெண் ஒருவரின் சடலம் புதைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அக்கு புதைக்கப் பட்டிருந்த இளம்பெண் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மீனவர் சிங்காரவேலு-தெய்வானை தம்பதியின் மகள் சூர்யா என்பது தெரியவந்தது.
சூர்யாவின் கொலை வழக்கு சம்பந்தமாக அவரின் காதலனான அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவரைக் கைது செய்தது போலீஸ். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:-
சூர்யாவும், ஞானவேலும் காதலித்துள்ளனர். அதன் காரணமாக கடந்தாண்டு சூர்யா கர்ப்படைந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிய வந்ததால், சூர்யாவின் பெற்றோர் அவருக்கு கருக்கலைப்பு செய்து விட்டனர். அதன்பிறகு காதலர்கள் இருவரும் சந்திப்பதற்கு இரு வீட்டிலும் தடை விதித்தனர்.
கர்ப்பம் தொடர்பாக ஞானவேலின் பெற்றோர் உட்பட அக்கம்பக்கத்தார் சூர்யாவைத் தரக்குறைவாகப் பேசி வந்துள்ளனர். இதனால் தன்னுடைய பெயருக்கும் களங்கம் ஏற்பட்டதாகக் கருதிய ஞானவேல், சூர்யாவைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனிமையான இடத்திற்கு சூர்யாவை அழைத்துச் சென்றுள்ளார் ஞானவேல். அங்கு தனது நண்பர்கள் துணையோடு சூர்யாவைக் கொன்று புதைத்துள்ளார். ஆனாலும், ஆவியாக வந்து தன்னை சூர்யா மிரட்டுவாரோ எனப் பயந்த ஞானவேல், நண்பர்கள் அறிவுரைப்படி சூர்யாவைக் கொன்ற இடத்தில் கடந்த 14ம் தேதி, 16ம் நாள் பூஜை செய்துள்ளார். அப்போது தான் போலீசில் சிக்கியுள்ளார்.
ஞானவேலின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவரது நண்பர்களான தீபன்ராஜ் (23), கிங் சசிக்குமார் (19) மற்றும் 17 வயது வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications