கந்துவட்டி தொல்லையால் மீண்டும் பறிபோன ஓர் உயிர் : தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்
கந்துவட்டி தொல்லையால் கடிதம் எழுதிவைத்து விட்டு திருச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் கந்துவட்டி தொல்லையால் தொடர் மரணங்கள் சமீபகால நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கந்துவட்டி தொல்லையால் தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இறந்தனர்.
சமீபத்தில் இணை தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கந்துவட்டியால் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதி அறையில் வாலிபர் தற்கொலை
திருச்சி மாவட்டம் பாலக்கரையை அடுத்த துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர் மகன் அருண்குமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் அருண்குமார் தங்கி இருந்த அறையில் இருந்து அதிக அளவில் டி.வி. சத்தம் கேட்டது. உடனே தங்கும் விடுதி ஊழியர்கள், அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். வெகுநேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அந்த அறையின் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது அருண்குமார், அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீஸார் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், உடனே இதுபற்றி விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அறையின் கதவை உடைத்து அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருண்குமார் கொண்டு வந்திருந்த பையை போலீசார் சோதனை செய்ததில் அதனுள் ரூ.1 லட்சம் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பான கணக்கு புத்தகங்களும் மற்றும் அருண்குமாரின் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, செல்போன் ஆகியவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கந்துவட்டி கொடுமை
மேலும் தற்கொலைக்கு முன் அருண்குமார் எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அதில்,நான் கடந்த சில நாட்களாக கந்துவட்டி கும்பலின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று போராடினேன். ஆனால் என்னால் முடியவில்லை. திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் அலெக்ஸ் ராஜா என்பவரிடம், நானும், எனது சகோதரரும் சிறுவயதிலேயே வேலைக்கு சேர்ந்தோம். 18 ஆண்டுகள் எங்களை அவர் கந்துவட்டி வசூலில் கொத்தடிமைகளாக வைத்திருந்தார். அவர் பொன்மலை ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் என பலரிடம் இருந்து சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு கந்துவட்டியில் கடன் வழங்கி வந்தார்.
போலீஸ் தனிப்படை அமைப்பு
கடந்த சில மாதங்களாக கந்துவட்டி மரணங்கள் பெரும் பிரச்னையாக இருந்தது. அப்போதுதான் அப்பாவி மக்களை ஏமாற்றி கந்துவட்டி செய்த கும்பலுக்கு முடிவுகட்ட நினைத்தேன். ஒரு வருடமாக என்னிடம் வைத்திருந்த ஆதாரங்களை திரட்டியும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும், நானும் அவரிடம் கடன் வாங்கியிருந்தேன். வட்டி வாங்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு என்னிடமும் வட்டிபோட்டு பணம் கேட்டார். கந்துவட்டி கொடுமையால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அதனால் தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவான அலெக்ஸ் ராஜா
இதனையடுத்து திருச்சிக்கு விரைந்து சென்று அருண்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அருண்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு அலெக்ஸ் ராஜாவையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அலெக்ஸ் ராஜாவிடம் பணம் வசூல் செய்யும் வேலையில் இருந்தாலும் அருண் அதே பகுதியிலும், ரயில்வே ஊழியர்களிடமும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார். தினமும் அருண் வீட்டின் முன் கந்துவட்டிக்காரர்கள் வந்து பணம் கேட்டதால், தான் வசூலித்து அலெக்ஸ் ராஜாவிற்கு தர வேண்டிய பணத்தை கையாடல் செய்து இருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மேலும் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.