"நம் காதலை உன் புருஷனிடம் சொல்லிருவேன்".. மிரட்டியே பெண்ணிடம் பணம், நகை பறித்த இளைஞர் கைது!
முன்னாள் காதலியை மிரட்டி பணம், நகை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: "நம் காதல் விவகாரத்தை உன் புருஷனிடம் சொல்லிவிடுவேன்" என்று மிரட்டியே பெண்ணிடம் பணம், நகைகளை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். வயது 29. இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். ஆனால், பெண்ணின் வீட்டில் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். அந்த பெண்ணும் சென்னையில் தனது கணவனுடன் புது வாழ்வை தொடங்கி விட்டார்.

ஆனால் காதலித்தவளை திருமணம் செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மதன்குமார், சென்னை புழுதிவாக்கத்தில் வசித்து வரும் அந்த பெண்ணை நேரில் சந்தித்து பேச ஆரம்பித்துள்ளார். கணவர் இல்லாத சமயங்களில் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்த மதன்குமார், "நம் காதல் விவகாரங்களையெல்லாம் உன் புருஷனிடம் சொல்லி விடுவேன்" என்று மிரட்ட தொடங்கினார்.
அத்துடன், பெண்ணிடமிருந்த பணம், நகைகளை வாங்க தொடங்கினார். அந்த பெண்ணும் மதன்குமாருக்கு பயந்து முடிந்தவரை நகை, பணம் கொடுத்து உள்ளார். இப்படியே 35 ஆயிரம் ரூபாய் பணமும், 11 சவரன் நகையும் மதன்குமார் அப்பெண்ணை மிரட்டியே வாங்கியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து பணம், நகை கேட்டு மதன்குமார் தொல்லை தர ஆரம்பித்தார். மேலும் "பணம் நகை கொடுக்காவிட்டால், கல்யாணத்துக்கு முன்னாடி நாம் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களையெல்லாம் உன் புருஷனுக்கு அனுப்பி விடுவேன்" என அந்த பெண்ணை மிரட்ட தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மதன்குமாரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications