காவிரி: கர்நாடகாவைக் கண்டித்து சீமான் பேரணியில் தீக்குளித்த இளைஞர் மிகவும் கவலைக்கிடம் #cauvery
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியின் போது தீக்குளித்த இளைஞர் 95 சதவீத தீக்காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரியில் தமிழகத்துக்காக நீரை கன்னடர்கள் மறுத்து வருகின்றனர். இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி புதுப்பேட்டை வரை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்பேரணி புதுப்பேட்டையை சென்றடைவதற்கு முன்னதாக திடீரென இளைஞர் ஒருவர் கர்நாடகாவைக் கண்டித்து திடீரென ஒருவர் நெருப்பை தம் மீது பற்ற வைத்து தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றி படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
95 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் உயிர்காக்கும் கருவி பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தீக்குளிக்க முயற்சித்த இளைஞர் மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரும்பத்தகாத நிகழ்வு
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், தமிழர்கள் புதியதாக உயிரைக் கொடுக்கவில்லை. மொழிக்காக, ஈழத்துக்காக பல லட்சம் தமிழர்கள் உயிரிழந்திருக்கிறோம்.
நாம் உயிர் தர வேண்டியதில்லை.. இதுபோன்ற சம்பவங்களை உண்மையிலேயே நான் வரவேற்கவில்லை. இது என்னை காயப்படுத்துகிறது.

இத்தகைய முயற்சிகள் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர விடாது. இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications