ஈரோட்டில் பரபரப்பு.. கழிவுநீர் கலந்த தண்ணீருடன் தமாகா இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் கழிவுநீருடன் தமாகா இளைஞரணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு: கழிவுநீர் கலந்த தண்ணீருடன் தமாகா இளைஞர் அணியினர் ஈரோடு ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.மா.கா இளைஞரணி சார்பில் மக்கள் பிரச்சனைகள் குறித்து மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று மனு அளிக்கப்பட்டது.
அதன்படி இளைஞரணி மாநிலதலைவர் யுவராஜா தலைமையில் கழிவு கலந்த தண்ணீருடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுவராஜா. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கழிவுகள் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடியைவிட அதிக அளவில் தண்ணீர் மாசடைந்துள்ளதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் எந்தவிதமான மக்கள் பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டிய யுவராஜா ஈரோட்டில் சுற்றுசாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தற்போது நான்கு வாரங்களில் ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மாசடைந்த குடிநீர் பாட்டில்களை அதிகாரிகளிடம் கொடுத்த அவர் மேலும் சில பாட்டில்கள் தண்ணீரை தரையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.