கேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்.. கோவையில் இளைஞர் பலி!
கோவை: அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில் மழை, வெள்ளம் ஓய்ந்த நிலையில், விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு பரவும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதனால் கேரளத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தையும் எலிக்காய்ச்சல் மிரட்ட தொடங்கியுள்ளது. கோவை கிணத்துக்கடவு கொண்டப்பட்டிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்கூட்டியே கண்டறிந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டம் ஐயங்கொள்ளியை சேர்ந்த சிவலிங்கம், தேவாலா பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் எலி காய்ச்சல் அறிகுறியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், வால்பாறையை சேர்ந்த பொன்னையனுக்கு எலி காய்ச்சலின் அறிகுறி இருப்பதால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் தமிழக - கேரள எல்லையோர மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications