முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல், சோடா பாட்டில் வீசி கொலை முயற்சி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
பொதுக்கூட்ட மேடையில், வாலிபர் கல்லை எடுத்து மேடையை நோக்கி வீசினார். பொன்முடியை நோக்கி வீசிய அந்த கல் பொன்முடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகி பூபதி என்பவரின் முகத்தில் பட்டது.
சென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை தமிழகம் முழுக்க அதன் தொண்டர்கள் 'இளைஞர் எழுச்சிநாள்' என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
துரைமுருகன் பங்கேற்பு
தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை முருகன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
நின்றபடி உரை
நிர்வாகிகள் ஒவ்வொருவராக நின்று கொண்டு பேசினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு வாலிபர் கல்லை எடுத்து மேடையை நோக்கி வீசினார். பொன்முடியை நோக்கி வீசிய அந்த கல் பொன்முடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகி பூபதி என்பவரின் முகத்தில் பட்டது.
பல் உடைந்தது
இந்த பயங்கர தாக்குதலால், பூபதியின் பற்கள் உடைந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்ததும் மேடையில் அமர்ந்திருந்த திமுக சீனியர் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சோடா பாட்டில் வீச்சு
இந்த அதிர்ச்சி மறைவதற்குள், அந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த சோடா பாட்டிலை பொன்முடியை நோக்கி வீசி எறிந்தார். பொன்முடி சுதாரித்ததால் அந்த பாட்டில் அவரது காலுக்கு அருகில் சென்று விழுந்தது.
தர்ம அடி
அதற்குள் அங்கிருந்த திமுக தொண்டர்கள் ஓடிச்சென்று அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை நைய புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்ததோடு, படுகாயமடைந்த கட்சி நிர்வாகி பூபதி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.