சென்னையில் பாட்டியை கொன்று 7.5 பவுன் நகைகளை திருடிய பேரன் கைது
சென்னை: சென்னையில் பாட்டியை கொலை செய்து அவரது நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருமழிசையைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(29). டிவி/ரேடியோ மெக்கானிக்காகவும், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளுக்கு கேப் டிரைவராகவும் உள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு தவனை முறையில் வேன் ஒன்றை வாங்கினார். அதற்கு மாதாமாதம் தவனை கட்டி வந்துள்ளார். அவருக்கு மாதத் தவனை பணத்தை கட்ட சிரமமாக இருந்துள்ளது.
இதையடுத்து அவர் சென்னையில் தனியாக வாழும் தனது பாட்டி அலமேலு அம்மாளின்(75) வீட்டுக்கு கடந்த 10ம் தேதி சென்றுள்ளார். வீட்டில் பாட்டி இல்லாததால் ஏதாவது விலை உயர்ந்த பொருளோ, பணமோ கிடைக்குமா என்று அவர் தேடிக் கொண்டிருந்தபோது அலமேலு அம்மாள் வந்தார். இதனால் பதட்டம் அடைந்த மணிவண்ணன் பாட்டியை கீழே தள்ளிவிட்டு, அவரின் கழுத்தை நெறித்துக் கொன்று அவர் அணிந்திருந்த ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 7.5 பவுன் நகைகளை திருடிச் சென்றார். மணிவண்ணன் அலமேலு அம்மாளின் மகள் சரஸ்வதியின் மகன். அலமேலு அம்மாள் தனது மகன் பரமானந்தத்திற்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தார்.
மணிவண்ணன் சென்ற பிறகு அலமேலு அம்மாளின் மகன்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அவர் பிணமாகக் கிடந்தார். மணிவண்ணன் ஏற்கனவே பாட்டி வீட்டில் திருடியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிவண்ணனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர் தனது வேனில் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.