மார்த்தாண்டம் அருகே நாளை அமெரிக்கா செல்லவிருந்த வாலிபர் பெட்ரோல் குண்டுவீசி கொலை
குமரி: குமரி மாவட்டத்தில் வேலைக்காக நாளை அமெரிக்கா செல்லவிருந்தவர் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருக்கும் கடந்தாங்கோடு, வாரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சஜு(23). ஏரோநாட்டிக்கல் டிப்ளமோ படித்துள்ள அவர் வேலைக்காக நாளை அமெரிக்காவுக்கு செல்லவிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை 5.30 மணிக்கு தனது பைக்கில் கழுவன்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சஜுவின் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் விழுந்தவுடன் காரில் இருந்து 6 பேர் கீழே இறங்கி வந்தனர்.
அதில் ஒரு நபர் சஜு மீது பெட்ரோல் குண்டை வீசினார். இதில் சஜுவின் பைக் தீப்பிடித்து எரிந்தது, அந்த தீ அவர் மீதும் பிடித்தது. உடனே அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அதற்குள் அந்த 6 பேரும் அவரை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஜு மீதான தீயை அணைத்தனர். உடனடியாக அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சஜு இறந்துவிட்டார் என்று கூறி குழித்துறையில் யாரோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இது குறித்து கழுவன்திட்டையைச் சேர்ந்த விஜயலால் என்பவர் மீது சஜு போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் சஜு கொல்லப்பட்டுள்ளார். இதனால் விஜயலால் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. சஜுவும், விஜயலாலும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்து சில பிரச்சனைகளால் பிரிந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications