ஓடும் ரயிலில் இருந்து வாலிபரை தள்ளிவிட்டு கொன்றது நானில்லை.. தற்கொலைக்கு முயன்ற திருநங்கை மறுப்பு
Recommended Video
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் தள்ளிவிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள திருநங்கை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்நிலையம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணா (32)கொலை செய்யப்பட்டார்.
அவரை காப்பாற்ற முயன்றபோது, உடன் பயணித்த அவரது உறவினர் காரம் வீரபாபு (20) படுகாயம் அடைந்தார்.
படுகாயம்
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, முதலில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கும் பிறகு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
திருநங்கைகள் ஆத்திரம்
இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 திருநங்கைகளிடம் விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து ஆத்திரமடைந்த,
வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் எஸ்.கே.கங்கா தலைமையில் சுமார் 250 திருநங்கைகள் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். போலீசார் பிடித்து வைத்துள்ள 3 திருநங்கைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
குற்றவாளி யார்?
இந்த நிலையில் சத்திய நாராயணாவை காலால் எட்டி உதைத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட திருநங்கை யார் என்பது பற்றி அடையாளம் தெரிந்துள்ளது. அந்த சுவேதா (36) என்ற அந்த திருநங்களை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள பாச்சல் பகுதியை சேர்ந்தவர். போலீசார் தேடுவதை அறிந்த சுவேதா எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலையை தான் செய்யவில்லை என சுவேதா மறுத்துள்ளார்.
ரயில்களில் பணத்தொல்லை
இதனிடையே இந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை - கோவை சேலம் - பெங்களூரு நடுவேயான ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் தொல்லை கொடுத்து, பணம் கேட்பது இல்லை என்றும், போலீசாருக்கு பயந்து, ரயில்களில் அவர்களது நடமாட்டம் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர்.