14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 8 ஆண்டு சிறை
கரூர்: கரூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் கொலை முயற்சிக்காக 1 வருடம் என 8 வருடம் சிறைதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த இராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதியை சார்ந்த பரளி பகுதியில் வசிப்பவர் ஜீவானந்தம். இவருடைய மனைவி மலர்கொடி, இத் தம்பதியினரின் இரண்டாவது மகள் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) செல்வி ஆவார்.
குளித்தலை கோட்டைமேடு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்த போது சைக்கிளில் குளித்தலை கோட்டைமேட்டிற்கும், அச்சிறுமியின் ஊரான பரளிக்கு சென்று வந்த போது, கடந்த வருடம் (2014), ஜூன் மாதம் 20 ம் தேதி மைலாடி என்ற இடத்தில் வாழைத்தோப்பில் நின்று கொண்டிருந்த அடைக்கன் என்ற வாலிபர் புல்லு கட்டு தூக்கி விடு பாப்பா என கூறி அச்சிறுமியை வாழைத்தோப்பிற்கு கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவரைக் கொலை செய்யவும் முயன்றார். ஆனால் அவரிடமிருந்து சிறுமி தப்பி வந்து விட்டார். இச்சம்பவம் குறித்த விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றவாளி அடைக்கன்னுக்கு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதற்கு 7 வருடமும், கொலை முயற்சி செய்ததற்காக 1 வருடமும் என மொத்தம் 8 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.