இளைஞரணி செயலாளர் முதல் செயல்தலைவர் வரை - ஸ்டாலின் 65 #HBDMKStalin
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 66வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
சென்னை: சட்டசபை எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் தனது 65வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 14வயதில் மாணவ பருவத்தில் அரசியலை தொடங்கிய ஸ்டாலின் திமுக செயல் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். 2வது மகனுக்கு பட்டுக்கோட்டையாரின் நினைவாக அழகிரி எனப் பெயரிட்ட கருணாநிதி, 3வது மகனுக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார்.
ஒரு முறை, தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியதில் உள்ள உள்ளார்ந்த காரணத்தை விளக்கிய கருணாநிதி, மூத்த மகனுக்கு அவருடைய தந்தை முத்துவேலரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக முத்து என்று பெயரிட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு அழகிரி எனப் பெயர் வைத்தாகவும் கூறினார்.
அய்யாதுரை டூ ஸ்டாலின்
மூன்றாவது மகன் பிறந்தால் பெரியரையும் அண்ணாவையும் இணைத்து அய்யாதுரை என்று தான் முதலில் பெயர் வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சோவியத் நாட்டின் புகழ்மிக்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் பெயரால் தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தாக திருமண விழா ஒன்றில் கூறியுள்ளார் ஸ்டாலின்.
பெயரை மாற்றுங்க
ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் ஸ்டாலின் என்ற பெயரை மாற்றினால்தான் பள்ளியில் சேர்க்க முடியும் என்று கூறினார்கள்.
பெயரை மாற்ற முடியாது
இந்த நிபந்தனையினைக் கேள்விப்பட்ட கருணாநிதி, பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டார். இதையடுத்து ஸ்டாலின் சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.
இளைஞர் திமுக
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். 14 வயதிலேயே அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கோபாலாபுரத்தில் தொடங்கிய அரசியல்
1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார். கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.
இளைஞரணி
இப்படிப் படிப்படியாக இளைஞரணி அமைப்பை வளர்த்து அதை அமைப்புரீதியாக 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இளைஞர் அமைப்பு
தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.
பலமுறை சிறைவாசம்
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார்.
அன்பகம்
தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி திமுக தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது.
கட்சிக்கு நிதி
ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.
கட்சி அலுவலகம் திறப்பு
இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணம் செய்து11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார். 02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கருணாநிதி திறந்து வைத்தார்.
கம்பீர ஸ்டாலின்
1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார். நெல்லையில் இளைஞரணியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.
நடிப்பில் ஆர்வம்
தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கருணாநிதி முன்னிலையில், முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது.
டிவி சீரியலில் ஸ்டாலின்
இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடகங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடித்தார் ஸ்டாலின்.
இளைய சூரியன்
1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன. 1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது. தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
சென்னை மேயர்
அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் கருணாநிதி.
சென்னையின் முதல் மேயர்
ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.
சென்னையின் வளர்ச்சி
மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விலகிய ஸ்டாலின்
2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.
ஆயிரம் விளக்கு டூ கொளத்தூர்
2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் சட்டசபைஇ தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி. ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்த ஸ்டாலின் பின்னர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எதிர்கட்சித்தலைவராக பதவி வகிக்கிறார்.
கட்சியின் தலைமை
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், பொருளாளர், செயல்தலைவர் என்று உயர்ந்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் வளர்ச்சி
66 வயதானலும் இளமையான அவரது தோற்றம் பலரையும் வியப்படைய வைக்கும் விஷயம் இது. தினசரி தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்பவர் ஸ்டாலின். இதுதவிர கிரிக்கெட், கம்ப்யூட்டர் கேம்ஸ், பேட்மின்டன், செஸ், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.