சிங்கப்பூரில் இருந்து நகை கடையாக வந்த வாலிபர்... சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: உடலில் கொத்து கொத்தாக தங்க நகைகளை அணிந்து வந்த வாலிபரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமான பயணிகளை குடியிரிமை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) என்பவர் கழுத்து, கைகளில் கொத்து கொத்தாக நகை அணிந்து கொண்டு வந்தார். அவர் அணிந்து வந்த நகைகளுக்கு எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதையடுத்து சிசுபாலனை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர் உடலில் அணிந்திருந்த நகைகள் மொத்தம் 290 கிராம். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சமாகும். நகைகளை பறிமுதல் செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், தங்க நகைகளை உடலில் அணிந்து வந்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படாது என்பதால் உடலில் போட்டு வந்தேன். இவற்றை கொண்டு சேர்த்தால் கணிசமான பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
யாருக்காக அவர் நகைகளை கடத்தி வந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.