திருப்பத்தூரில் பெண் போலீஸிடம் தங்க நகை பறித்த கிருஷ்ணகிரி இளைஞர்கள்.. 60 நாளில் நடந்த சம்பவம்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மனைவி லட்சுமி என்பவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்கூட்டியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரிடம் 11 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆன2 இளைஞர்கள் ஒன்றரை மாதத்தில் போலீசிடம் சிக்கியிருக்கிறார்கள்..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மனைவி லட்சுமி என்பவருக்கு 42 வயது ஆகிறது. இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி பணியை முடித்து விட்டு, ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கூட்டு ரோடு பகுதியில் சென்றபோது, இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென லட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்கள். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி பகுதியில் ஜோலார்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பாறைகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வேடியப்பன் (38), தர்மபுரி மாவட்டம் அரூர் மூக்கனூர்பட்டி மகேந்திரன் மகன் சத்தியமூர்த்தி (31) என்பது தெரிய வந்தது. மேலும் பெண் போலீஸ் லட்சுமியிடம் 11 பவுன் செயினை பறித்து சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications