காங்கிரஸை குஷ்பு காங்கிரஸாக்கிய முழுப் பெருமையும் இளங்கோவனுக்கே.. தமாகா யுவராஜ் "அட்டாக்"
கரூர்: பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியை குஷ்பு காங்கிரஸ் கட்சியாக ஆக்கிய பெருமை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையே சேரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி கூட்டம் வரும் 25 ம் தேதி கரூரில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் தமாகாவின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்., அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறது. இதில் இளைஞரணி சார்பில் வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கு, வணிக வளாகம், கல்லூரி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் தொடங்க உள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் கொச்சைபடுத்தி பேசியதை கண்டித்து அவர்கள் கட்சியினரே வாய் பேச முடியாமல் உள்ளனர். கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு உள்ளிட்ட அவரது கட்சியினரே மெளனமாகத்தான் உள்ளனர். குஷ்பு மட்டும் தான் பேசி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது குஷ்பு காங்கிரஸ் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
காவிரி நீரானது விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் வாழும் மக்களின் 80 சதவிகித குடிநீர் ஆதாரங்களை உள்ளடக்கியது. ஆகையால் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணையை கட்டியே தீருவேன் என்ற மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை தமிழகத்திற்குள் கால் வைக்க விட மாட்டோம். இதை தமிழக பா.ஜ.க வும் தடுக்க வேண்டும் ஏனென்றால் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகும் என்றார் அவர். பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எம்.இராஜேஷ், மாவட்ட தலைவர்கள் (மேற்கு) ஸ்டீபன் பாபு, (கிழக்கு) ஸ்கை யுவராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.