யுவராஜுக்கு சிறைக்காவல் நவம்பர் 16 வரை நீட்டிப்பு
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜின் சிறைக் காவல் நவம்பர் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் தானாக வந்து போலீஸில் சரணடைந்தார் யுவராஜ். இதையடுத்து அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவரது சிறைக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் அவரை நாமக்கல் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதில் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாக உணர்ந்த காவல்துறை வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரை நாமக்கல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜிடம் நேற்று மாலை 5.50 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் அவரது காவலை நவம்பர் 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.