இந்தியாவின் இளவயது ஆளுநர்! எத்தனையோ பிரச்சினை வந்தது..ஆனால் சமாளித்தேன்! தமிழிசையின் சக்சஸ் சீக்ரெட்
செங்கல்பட்டு : இந்தியாவிலேயே இளம் வயது ஆளுநராக தெலுங்கானாவிற்கு பொறுப்பேற்ற பிறகு இதனை எப்படி சமாளிப்பார் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், அதனை எனது கல்வியறிவு மூலம் வெற்றி கொண்டேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது
இதில், தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழிசை சவுந்திரராஜன்
நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவிலேயே இளம் வயது ஆளுநராக தெலுங்கானாவிற்கு பொறுப்பேற்ற பிறகு இதனை எப்படி சமாளிப்பார் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், அதனை எனது கல்வியறிவு மூலம் வெற்றி கொண்டேன். அதுபோலவே, புதுச்சேரியின் ஆளுநராக கூடுதல் பொறுப்புக்கு வந்த பிறகு, இதனை எப்படி சமாளிப்பார் என்று மீண்டும் விமர்சனம் செய்தனர்.

சமாளிக்க வேண்டும்
ஆனால், அதனையும் எனது கல்வியறிவு மூலம் வெற்றிக் கொண்டேன். அதுபோலவே, மாணவர்களும், தங்களின் கல்வி அறிவு மூலம் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதாரணமானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை ஆசிரியர்கள்தான் ஊக்கம் கொடுத்து, செதுக்கி சமூகத்தில் பெரிய மனிதர்களாக மாற்றுகின்றனர். ஆதலால், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றும் மரியாதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

5 டிரில்லியன்
இந்தியாவில் அடுத்த 2025 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்டுவர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அதுபோல, மாணவர்களும் தங்களின் இலக்குகளை பெரிய அளவில் வைக்க வேண்டும். இந்தியா இதற்கு முன்பு பிற நாடுகளிடம் தடுப்பூசிக்கு கையேந்தி இருந்தது.

வெற்றி அடைய முடியும்
ஆனால், 150 நாடுகளுக்கு இந்தியா தனது உள்நாட்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது. இவை அனைத்தும் கல்வி கற்ற அறிஞர்களாளேயே சாத்தியமானது. இதுபோல, மாணவர்களும் நமது நாட்டை முன்னேற்றும் வகையில் பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்ய வேண்டும் என்றார். மேலும், மாணவர்கள் எப்போதும், உழைப்பு என்ற தாரக மந்திரத்தை கையாண்டு செயல்பட்டால் எந்த நிலையிலும் வெற்றி அடைய முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications