சுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு
பட்டுக்கோட்டை அருகே சுடுகாட்டில் நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
தஞ்சை: சுடுகாட்டில் உள்ள தூங்குமூஞ்சி மரத்தில் தூக்குபோட்டு தொங்கிவிட்டார் ஒருவர்.. இவர் யார் என்ற விவரம் தெரியாததால் விசாரணை படுதீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஒரு சுடுகாடு இருக்கிறது. இங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் போனது.
இதையடுத்து சுடுகாட்டுக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டனர். அங்கிருக்கும் ஒரு தூங்குமூஞ்சி மரத்தில் அந்த நபர் தற்கொலை செய்துள்ளார். அந்த மரத்தின் கிளை எப்படியும் 25 அடி உயரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
உயிரிழந்த நபருக்கு வயது 35 இருக்கும்.. பேண்ட்-சர்ட் அணிந்திருக்கிறார்.. ஆனால், காவி வேட்டியில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இவர் யார் என்ன என்ற விவரமும் தெரியவில்லை. ஒருவேளை இந்து அமைப்பை சேர்ந்தவரா? 25 அடி உயரத்தில் ஏறி தூக்கு போட என்ன காரணம்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? அல்லது யாராவது இவரை கொன்று இப்படி மரத்தில் தொங்கவிட்டு விட்டார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் அவரது மரணம் பற்றி உண்மைதன்மை தெரியவரும். எனினும், சுடுகாட்டில் காவி வேட்டியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.