சொன்னா கேக்க மாட்டீங்களா? விநாயகர் சிலை ஊர்வலத்தில் எஸ்.பி - இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது மேளம் அடித்ததை போலீசார் கண்டித்தனர். போலீசார் தடுத்தும், மேளம் அடிப்பதை நிறுத்தாததால் மாவட்ட எஸ்.பிக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் - இந்து அமைப்பினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோஷங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்லவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சில இடங்களில் போலீசாரின் அறிவுரைகளை மீறியதால் பதற்றம் ஏற்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்வையொட்டி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தபோதும் சில இடங்களில் தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி வீதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மேளம் அடித்ததை போலீசார் கண்டித்தனர். அதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மாவட்ட எஸ்.பிக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் தடுத்தும், மேளம் அடிப்பதை நிறுத்தாததால் போலீசார் - இந்து அமைப்பினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து, போலீசார் அமைதிக்கு கொண்டுவந்து, ஊர்வலத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக இன்று தேனியில் சிவசேனா கட்சியினர் சார்பில் 4 அடி விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விநாயகர் சிலையை நேரு சிலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தேனி அரண்மனை புதூரில் உள்ள பெரியாற்றில் கரைத்தனர். சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை கரைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், அதனை மீறி சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications