உலகின் மிக உயரமான 23 அடி உயர ஆனந்த நடராஜர்..பிரம்மாண்ட அபிஷேகம்.. என்னென்ன சிறப்பம்சம்
தஞ்சாவூர்: 23 அடி உயரம், 17 அடி அகலம் மற்றும் 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பின் மூலம் ஆனந்த நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திம்மக்குடியில் இந்த பிரம்மாண்ட நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
நடராஜர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் சிவபிரான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.
நடராஜரை எப்போது பார்த்து வணங்கினாலும் ஒருவித உற்சாகம் பிறக்கும். கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்துள்ள திம்மக்குடி கிராமத்தில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல சிலைகளை தயார் செய்து தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, பல வெளிநாடுகளுக்கும் கோயில்களுக்கும் அனுப்பி வருகிறார்.
எப்படி சீல் வைக்கலாம்? சுப்ரீம் கோர்ட் சம்மட்டி அடி.. ஓபிஎஸ்க்கு தோல்வி..சி.வி. சண்முகம் சுளீர்
பிரம்மாண்ட நடராஜர் சிலை
இதனிடையே கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலைதான் 8 அடி உயரத்துடன் இதுவரை உலகிலேயே பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையாக இருந்தது. ஆனால், கடந்த 2006 ஆம் ஆண்டு இதைவிட பெரிதாக 11 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலையை இந்திய அரசின் ஏற்பாட்டின்படி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அணு ஆராய்ச்சி மையத்தில் வைப்பதற்காக தயார் செய்தார். இவ்வாறு தயார் செய்யப்பட்ட நடராஜர் சிலையே இதுவரை உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்தது. இருப்பினும் இவரது சாதனையை இவரே முறியடித்ததாக இருக்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்ட வரதராஜ், இதைவிட பெரிதாக சுமார் 23 அடி உயரத்தில் நடராஜர் சிலை வடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதுவும் ஒற்றை வார்ப்பில் என்பதனை முக்கியமாக கொண்டு செயல்படத் தொடங்கினார்.
23 அடி உயர நடராஜர்
இதற்காக சுமார் நான்கு ஆண்டுகள் தேடலின்போது, கடந்த 2010 ஆம் ஆண்டில் சிலை தயாரிக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது. 23 அடி நடராஜர் ஐம்பொன் விக்ரகம் ஒற்றை வார்ப்பு முறையில் உருவாக்கப்பட்டது. பின்னர் போதிய நிதி இல்லாததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. பிறகு 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடம் ஒத்துழைப்போடு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு 23 அடி உயரம், 17 அடி அகலம் மற்றும் 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை உருவானது. சுமார் பத்து ஆண்டுகள் நிறைவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடாக தற்போது இப்பணிகள் முழுமை பெற்றுள்ளது.
என்னென்ன சிறப்புகள்
15 டன் எடையில் 23 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்ட நான்கு கரங்களுடன் ஒற்றை வார்ப்பு முறையில் இச்சிலையை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து வரதராஜ் தெரிவிக்கையில், "முயலனை மிதித்திக் கொண்டிருப்பதைபோல ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையின் இரு மகரப் பறவைகளுடன் தத்ரூபமாக, முழுவதும் சோழர் கால பாணியிலேயே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அபிஷேகம்
இதன் பெரிய திருவாட்சியில் 102 தாமரைப்பூக்கள், 50 பூதகணங்கள், 52 சிங்கங்கள், 34 சர்பங்கள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் வரிசையில் சிவ அட்சரங்கள் 51ஐ பிரதிபலிக்கும் வகையில் 51 தீ சுவாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் கொண்ட பீடத்தில், திருவாசகங்கள் பொறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பணிகள் அண்மையில் முழுமை பெற்றுள்ளது. ரூ.4 கோடியில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்ட சிலைக்கு நேற்று மாலை திம்மக்குடியில் அபிஷேகம் நடந்தது.
தமிழிசை சவுந்தரராஜன்
சோமவார தினமான நேற்று மாலை பிரதோஷ வேளையில், நந்தி வாத்தியங்கள் முழங்க, புனித நீர் நிரப்பிய கடங்களை வைத்து தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் சிறப்பு யாகங்கள் நடத்தினர். ஓதுவார்கள் பாடலை பாட, வாத்தியங்கள் முழங்க நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நடராஜர் சிலையை பயபக்தியுடன் வணங்கினார். பின்னர் அந்த சிலையை வேலூர் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேசிடம் ஒப்படைத்தார். விழாவில் சிற்பி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இச்சிலையை வடிவமைத்த ஸ்தபதிகளுக்கும், பொன்னாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தார் இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மகா தீபாராதனை
இறுதியாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நக்கீரன் கோபால், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ் ஆகியோர் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்தும், உதிரி மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர்.
சிற்பிகளுக்கு பாராட்டு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், "இந்த பிரமாண்டமான 23 அடி உயர நடராஜர் சிலையை ஸ்தபதிகள் சீனிவாசன், வரதராஜ் மற்றும் மயூத் ஆகியோர் இணைந்து நம்மை படைத்த இறைவனை அவர்கள் படைத்திருக்கிறார்கள். விழாவில் இறைவன், மனிதர்களை படைக்கிறான். ஆனால் மனிதர்களால் இறைவனை படைக்க முடியும் என்று இன்றைக்கு சாதனை செய்து காட்டியுள்ளனர். ஒரு குழந்தையை பெற்றெடுக்க 10 மாதம் ஆகிறது. ஆனால் பெற்றெடுத்த மனித பிறவிகள் ஒரு இறைவனை 10 ஆண்டுகளில் வடிவமைத்து உள்ளனர். இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த சிற்பிகளை பாராட்டுகிறேன் என்றார். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது பணி அமைந்துள்ளது. அவர்களை பாராட்டுகிறேன். இப்பணிக்கு பக்க பலமாக இருந்த நக்கீரன் கோபாலும் வேலூர் நாராயணி பீடம் அம்மாவும் இருந்துள்ளனர் என தெரிவித்தார்.