''செந்தில்பாலாஜியால் திமுக வீழ்ச்சி அடையும்''! முதலமைச்சராக எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! -அன்புமணி
தஞ்சாவூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியால் திமுக வீழ்ச்சியை சந்திக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
தமிழ்நாட்டில் இளைய சமுதாயத்தினரிடையே மது திணிக்கப்பட்டு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு வருவதாக அன்புமணி வேதனைத் தெரிவித்தார். இது போன்ற அவல நிலையை மாற்ற தனக்கு ஒரு முறை வாய்ப்பளித்து முதலமைச்சராக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவிலேயே மதுவணிகத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும் இளம் கைம்பெண்கள் அதிகம் பேர் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளதாகவும் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்கனவே அறிக்கை யுத்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதில், அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை மதுவிலக்குத்துறை அமைச்சராக முதல்வர் நியமிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார்.
இப்போது பொதுக்கூட்டங்களிலும் அமைச்சர் செந்தில்பாலஜியை அன்புமணி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்பாசனத்துறையில் புதிய திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அன்புமணி, தமிழகத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அன்புமணி ராமதாஸ், மீண்டும் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனது தன் மீதான விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications