நல்லா வெடிங்க.. சந்தோஷமா வெடிங்க.. இந்த நாற்றையும் நடுங்க.. வித்தியாசமான பட்டாசுக் கடை!
தஞ்சை: வெடி வெடிப்பதால் ஏற்படும் மாசு காற்றை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு பட்டாசு கடையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசுகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பட்டாசுகளை வெடித்து வருகின்றனர்.
என்னதான் இந்த பட்டாசுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே சென்றாலும் ஆண்டுக்கு ஒரு முறை என்பதால் மக்கள் பட்டாசுகளை வாங்குவதை தவிர்ப்பதில்லை.
பாதிப்பு
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அதிகளவு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டது.
பல்வேறு முயற்சிகள்
இதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கடுமையான விதிகளை விதித்து காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் காற்று மாசினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பல்வேறு முயற்சிகள் உள்ளன.
இலவசம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நடும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் பட்டாசு வாங்குபவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய புங்க மரம். வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை இலவசமாக வழங்கி வருகிறது.
மக்கள் ஆர்வம்
பொதுமக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தியும் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறார் அந்த பட்டாசு கடை உரிமையாளர். இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.