சீமான், அண்ணாமலையையே மிஞ்சிட்டார் விஜய்! இனிதான் அவரு உஷாரா இருக்கணும்! பேரரசு திடீர் அட்வைஸ்
தஞ்சை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிஞ்சிவிட்டார். ஆனால் இனிதான் அவர் உஷாராக இருக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சையில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர். பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து இயக்குநர் பேரரசு கூறுகையில், மலையாளம் என்றில்லை, எந்த சினிமா துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறினாலும் அது உண்மையாக இருந்தால் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் சினிமா துறையும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இனி பாலியல் குற்றங்கள் நடந்தால் நடிகைகளும் இதர பெண் கலைஞர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
10 ஆண்டுகள், 8 ஆண்டுகள் கழித்து புகார் கூறினால், அது ஏதோ கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை, தமிழகத்தில் எந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக புகார் கொடுத்தாலும் நடிகர், நடிகைகள் முதலில் குரல் கொடுக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். இனிமேல்தான் அவருக்கு சோதனை வரும்.
அவரது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட நிறைய அரசியல்வாதிகள் வேலை செய்வார்கள். எனவே விஜய் இனி உஷாராக இருக்க வேண்டும். அவருடைய திறமை அரசியலிலும் நிரூபிக்கப்பட வேண்டும். அரசியலில் குதிப்பதற்கு சினிமா புகழ்தான் அஸ்திவாரம். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர் பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
ஆட்சியாளர்கள் தவறு செய்தால் துணிந்து தட்டி கேட்கிறீர்களா? என மக்கள் கவனிப்பார்கள். அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. சீமான், அண்ணாமலை போன்றவர்கள் மக்களை சந்தித்து பேசி வாக்கு வங்கியை அதிகரித்துள்ளனர். ஆனால் விஜய் சாருக்கு அப்படி இல்லை. ஒரு அறிக்கை போதும் 10 சதவீதம் வாக்கு வங்கி கிடைக்கும்.
சீமான், அண்ணாமலை போன்றவர்கள் கஷ்டப்பட்டு 10 ஆண்டுகளாக வளர்த்ததை வெறும் 10 மாதங்களிலேயே விஜய் பெற்றுவிட்டார். ஆட்சி அமைப்பதற்கு இது போதாது, மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும் என பேரரசு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார். அதற்காக தற்போது அவர் நடித்துள்ள கோட் படம்தான் கடைசி படம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் இரு போர் யானைகளுடன் வெற்றிக்கான வாகை மலர்கள் இருந்தன.
இந்த நிலையில் விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் அங்கீகாரமும் இன்று கிடைத்துவிட்டது. இதை விஜய் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. அது எப்போது என்பதை விரைவில் விஜய் அறிவிக்கவுள்ளார். இதனால் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications