ஓபிஎஸ், தினகரன் போன்ற துரோகிகளால் அதிமுகவை கைப்பற்ற முடியாது.. எடப்பாடி பழனிசாமி கவுன்ட்டர் அட்டாக்!
தஞ்சாவூர் : ஒரத்தநாட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், வைத்திலிங்கம், டிடிவி தினகரன் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், திமுக அரசு மீதும் சரமாரியாக விமர்சனங்களை வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அதிமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அண்மையில் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மன் மா.சேகர் செய்திருந்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, சாதாரண ஒரு அதிமுக தொண்டன் கூட அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறான். ஆனால், அவருக்கு அந்த எண்ணம் இல்லை. யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது, எந்த உதவியும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர் வைத்திலிங்கம்.
தற்போது ஓபிஎஸ் - வைத்திலிங்கம் அதிமுகவின் துரோகிகளாக மாறிவிட்டனர். ஓராயிரம் ஓபிஎஸ் வந்தாலும் - ஓராயிரம் வைத்திலிங்கம் வந்தாலும் துரோகிகளுக்கு அதிமுகவில் எப்போதும் இடம் கிடையாது. திமுகவின் பினாமியாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பது, சபரீசனை சந்தித்ததன் மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. துரோகிகள் என்று மாறி மாறி கூறிக் கொண்டவர்கள் இப்போது ஒன்றாக இணைந்துவிட்டனர்.
துரோகிகள் இணைந்து அதிமுகவை கைப்பற்றுவோம் எனக் கூறுகின்றனர். ஓபிஎஸ் - டிடிவி தினகரனால் எந்தக் காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. 1.5 கோடி தொண்டனின் சொத்து அதிமுக. ஒரு செங்கல்லை கூட அவர்களால் கைப்பற்ற முடியாது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - வைத்திலிங்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திமுகவை வீழ்த்துவதுதான் எங்கள் லட்சியம்.
எங்களுக்கு திமுக தான் எதிரி, திமுகவை வீழ்த்துவதுதான் எங்களது நோக்கம். 30 ஆயிரம் கோடி சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக நாங்கள் பேசவில்லை, திமுகவின் திறமையான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். அதனை நிச்சயமாக அதிமுக சும்மா விடாது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த பணத்தை கொண்டு வந்தே தீருவோம். நாங்கள் ஆட்சிக்கு வரும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

மேலும் இது குறித்து டெல்லி சென்று உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். இது தொடர்பாக அவரும் ஆதாரத்தை தேடிக்கொண்டு உள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் 30,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரிடமும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்.
இந்த திமுக அரசு தான், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து இந்த டெல்டா மண்டலத்தை பாலைவனமாக ஆக்க முயற்சி செய்தது. இதை தடுத்து நிறுத்தி அரும்பாடுபட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த ஒரே அரசு அதிமுக அரசு.
அதுபோல நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது அது ஒரிசா ஆந்திரா குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த திமுக அரசு இதுவரை எந்த குரலும் கொடுக்கவில்லை. தற்போதைய முதலமைச்சருக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது, விவசாயிகளைப் பற்றியும் எந்த கவலையும் கிடையாது.
அதிமுக ஆட்சியில் டெல்டா மண்டலத்தில் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்கினோம். ஆனால் இந்த தி.மு.க ஆட்சியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே வழங்குகின்றனர். கரும்பு கொள்ளைக்கு இரவில் செல்லும் விவசாயி பாம்பு கடித்து உயிர் இழப்பு ஏற்படும் ஏசி ரூம்ல இருக்குற முதலமைச்சருக்கு விவசாயியை பற்றி என்ன தெரியும்.
தற்போதைய முதலமைச்சர் தலைமையின் கீழ் பணி செய்யும் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளை அழைத்து வந்து வைத்து பல்லை பிடுங்குகிறார். குற்றம் செய்த குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியதானே சட்டம், அதை விட்டுவிட்டு பிற நடவடிக்கையில் ஈடுபட்டால் நியாயமா? இதற்கும் நாங்கள் குரல் கொடுத்த பின்பு தான் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பத்திர பதிவுத்துறையில் கருணாநிதி ஆட்சியில கூட இல்லாத கமிஷன் பெறப்படுகிறது. இந்த திமுக ஆட்சியில் ஒரு லட்சத்துக்கு இவ்வளவு என கமிஷன் கேட்டு வாங்குகிறார்கள். கட்டுமான பொருட்கள் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளது, பால் விலை உயர்வு உங்களுக்கே தெரியும், பஸ் கட்டணம் உயர்வு, மின்சார உயர்வு, முன்பெல்லாம் கரன்ட்டை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் ஆனால் இப்போது பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications