தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை பெயர்த்தெடுத்த மர்மநபர்கள்.. கடும் கோபத்துடன் எடப்பாடி பழனிச்சாமி வார்னிங்
தஞ்சை: தஞ்சையில் இரண்டு அடி உயரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மர்ம நபர்களால் பெயர்த்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு, தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. 4 அடி உயர பீடத்தில் இரண்டு அடியில் எம்ஜிஆர் சிலை இருந்தது.
இந்த நிலையில் அந்த சிலையை இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து நடைபாதையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகளும் எம்ஜிஆர் ரசிகர்களும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

எம்ஜிஆர் சிலை
தஞ்சை மாவட்டத்தின் அதிமுக பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு போய் பார்த்தனர். அப்போது சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகே நடைபாதையில் இருந்த தள்ளுவண்டியில் சிலை வீசப்பட்டிருந்தது. அதை கைப்பற்றினர்.

சிலை அகற்றம்
இதையடுத்து அந்த இடத்தில் மீண்டும் சிலையை அமைக்கும் முயற்சியில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலை எதற்காக அகற்றப்பட்டது? சிலையை அகற்றியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எம்ஜிஆர் சிலை சேதம்
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல். தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

எச்சரிக்கை
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக் கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications