ஈரோடு கிழக்கு.. அதிமுகவிற்கு கூடுதலாக 10,000 ஓட்டு வரும்.. டிடிவி தினகரன் சொல்றதை பாருங்க
இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்குடன் மேஜிக் சின்னமாக இருந்தது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இரட்டை இலையை வைத்து கூடுதலாக 5 முதல் 10
தஞ்சாவூர்: ‛‛எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பிராந்திய கட்சியாக மாறிவிட்டது. இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்குடன் மேஜிக் சின்னமாக இருந்தது. தற்போது இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. தலைகீழாக நின்றாலும் எடப்பாடி பழனிச்சாமியால் இரட்டை இலையை காட்டி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாக வாங்க முடியுமே தவிர வெற்றி பெற முடியாது'' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கணித்து கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவரொவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவும், மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

அமமுக போட்டியில்லை
இந்த தேர்தலில் இருந்து வேட்பாளரை திரும்ப பெறுவதாக ஓ பன்னீர் செல்வம் அணி அறிவித்த நிலையில் அவரது வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாறாக அமமுக வேட்பாளர் சிவபிரசாந்தின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் போட்டியில் இருந்து அமமுக பின்வாங்கி உள்ளது.

டிடிவி தினகரன் சொன்னது என்ன?
இந்நிலையில் தான் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாததால் போட்டியில்லை. இரட்டை இலை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் கையெழுத்து போடமாட்டார்கள். தமிழ் மகன் உசேனுக்கு தான் இரட்டை இலை சொந்தம் என நீதிமன்றம் கூறியுள்ளது. நாளை தமிழ் மகன் உசேன் தான் நிரந்தரமாக கையெழுத்திட வேண்டும் என்று கூறிவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி கதி என்னவாகும்?. இருப்பினும் தற்போதைய தீர்ப்பு என்பது இந்த தேர்தலுக்கான இடைக்கால தீர்ப்பு தான். இறுதி தீர்ப்பை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேஜிக் சின்னமாக இரட்டை இலை
மேலும் இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்குடன் மேஜிக் சின்னமாக இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் 4 ஆண்டு இருந்த காலத்தில்(மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிடுகிறார்) ஜேப்படி வித்தைகள் செய்தார். ஜூலை 11 பொதுக்குழு போர்க்களத்துக்கு பிறகு இவர்கள் யார் என்பதை இவர்களே மக்கள் முன்பு தோலுரித்து காட்டிவிட்டனர்.

வெற்றி பெற முடியாது
தற்போது இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு என்பது குறைந்து வருகிறது. இவர்கள் தலைகீழாக நின்றாலும் 4 ஆண்டில் சேர்த்த நிதியை கொண்டு சேர்த்தாலும் கூட இரட்டை இலையை காட்டி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாக வாங்க முடியுமே தவிர இவர்களால் வெற்றி பெற முடியாது என்பது ஊரறிந்த உண்மை.

பிராந்திய கட்சியாக அதிமுக
இரட்டை இலை சின்னம் என்பது பழனிச்சாமியை சார்ந்து வருங்காலத்திலும் இருக்குமேயானால் அந்த சின்னம் தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கை இழக்கும். ஏனென்றால் பிராந்திய கட்சியாக அதிமுகவை பழனிச்சாமி கொண்டு சென்றுவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருக்கும் சுயநலவாதிகளால் உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் அவர்களிடம் இருக்கும் நிலையில் உண்மையை உணர்ந்து எங்களுடன் தொண்டர்கள் கைகோர்க்கும் காலம் விரைவில் வரும். அடுத்த தேர்தலில் இது வெளிப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications