துணை வேந்தருடன் மோதல்.. பதிவாளர் அறைக்கு போட்ட பூட்டு உடைப்பு! தஞ்சை தமிழ் பல்கலை.யில் பரபரப்பு
தஞ்சை: தஞ்சை பல்கலைக்கழத்தில் பதிவாளர் மற்றும் துணை வேந்தர் இடையேயான மோதலில், பதிவாளர் அறை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இன்று புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் பதவியேற்க சென்ற போது அறை பூட்டப்பட்டு இருந்ததால், அந்த பூட்டு காவல்துறை உதவியுடன் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக தியாகராஜன் பதவி வகித்து வந்தார். இதேபோல் தஞ்சை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு சங்கர் பொறுப்பு துணை வேந்தராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக தியாகராஜனுக்கு பதிலாக வெற்றிச்செல்வன் என்பவரை நியமித்து சங்கர் உத்தரவு பிறப்பித்தார்.

முறைகேடாக பதவியில் சேர்ந்ததாக கூறி தியாகராஜனை பணி நீக்கம் செய்து சங்கர் உத்தரவிட்டு இருந்தார். பதிலுக்கு பொறுப்பு துணை வேந்தராக சங்கர் இருப்பதே செல்லாது என்று தியாகராஜன் கூறினார். இதனால் இந்த விவகாரத்தில் இவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பொறுப்பு பதிவாளர் அறை பூட்டப்பட்டது.
இந்த நிலையில், இன்று தஞ்சை பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் பொறுப்பேற்பதற்காக இன்று தனது அறைக்கு சென்றார். அப்போது அந்த அறை பூட்டு போட்டு இருந்தது. இது பற்றி துணைவேந்தருக்கு தெரிவிக்கப்பட்டதும், காவல் துறையினர் உதவியுடன் அந்த அறையின் பூட்டை திறக்கும் பணி நடந்தது. ஒவ்வொரு சாவியாக வைத்து திறந்து பார்க்கப்பட்டது.
ஆனால் அதில் இருந்த சாவிகள் எதுவும் திறக்காததால், இறுதியில் பூட்டானது உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை பல்கலைக்கழக மோதல் விவகாரம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியிருக்கிறார். துணை வேந்தரை நியமிக்காததால் பிரச்சினை ஏற்படுவது மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications