திபுதிபுன்னு.. தண்டவாளத்தில் படுத்த விவசாயிகள்! டெல்டாவில் ரயில் மறியல் -காவிரி நீர் திறக்க கோரிக்கை
திருவாரூர்: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவையும், மத்திய அரசின் கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டையும் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாகவும், கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் தமிழ்நாடு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் சுமத்தி உள்ளார்கள்.
தென்மேற்கு பருவமழை முடிந்து இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும். ஆனால், கர்நாடகாவில் இனி மழைக்கான வாய்ப்பே இல்லை. எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
ஆணையம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்தால், ஆணையத்தின் முடிவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்ற மறுக்கிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் காரணமாக தண்ணீரை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அரசு உபரி நீரையும் தடுத்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சிக்கிறது. மத்திய அரசு அதற்கு மறைமுகமாக துணை போகிறது.
3.50 லட்சம் ஏக்கரில் தமிழ்நாட்டில் குருவை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் பயிர்கள் கருகத் தொடங்கி உள்ளன. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக, உடனடியாக காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழ்நாட்டின் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் நிலையில் அதனை கைவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம நடைபெற உள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு கலந்துகொள்ள வேண்டும். இதை தொடர்ந்து அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்." என்றார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். குறிப்பாக பிஆர் பாண்டியன் தலைமையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.












Click it and Unblock the Notifications