நானும் அதிமுகவுக்கு தலைமை தாங்கலாம்.. பற்ற வைத்த காமராஜ்.. ‘சோழ மண்டல தளபதி’ - சீண்டிய ஆதரவாளர்கள்!
தஞ்சாவூர் : அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம் என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தையும் சீண்டும் வகையில் பேசியுள்ளார் காமராஜ்.
வைத்திலிங்கத்தை சீண்டும் விதமாக, காமராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தபோது 'சோழ மண்டல தளபதி' என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் அமைச்சர் காமராஜ்
அ.தி.மு.க சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் பங்கேற்றார்.

வைத்திலிங்கம் ஏரியா
முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் ஏரியாவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது பலத்தைக் காட்டுவதற்காக பெரும் கூட்டத்தைக் கூட்டினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமாகியுள்ளது. அதேநேரம் வைத்திலிங்கம் தரப்பினர் இந்தக் கூட்டத்தால் அப்செட் ஆகியுள்ளனர்.

சீண்டல்
தஞ்சை அதிமுகவினரால் ‘சோழ மண்டல தளபதி' என அழைக்கப்படுபவர் வைத்திலிங்கம். அவர் ஓபிஎஸ் தரப்பில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி, காமராஜை அங்கு வலுவாக களமிறக்க நினைக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் ‘சோழ மண்டல தளபதி' எனக் கோஷமிட்டுள்ளனர். மேலும், அவருக்கு வாள் பரிசளித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜும் வைத்திலிங்கத்தை சீண்டும் வகையில் பேசினார்.

3 மாதத்தில்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "அ.தி.மு.க சாதாரண இயக்கம் அல்ல. எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம். எடப்பாடியார் வழி நடத்துகின்ற இயக்கம். அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.கவில் இடைக்கால பொதுச்செயலராக உள்ள பழனிசாமி, இன்னும் மூன்று மாதத்தில் தொண்டர்களால் அவர் தேர்வு செய்யப்பட்டு நிரந்தர பொதுச் செயலாளராக தலைமை ஏற்பார்.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க தொண்டன் நினைத்தால், எதையும் செய்ய முடியும். அ.தி.மு.க 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இயக்கம். ஆட்சியில் ஏதோ, பேருக்காக இருந்த இயக்கம் அல்ல. தமிழ்நாட்டிலே பசியை போக்கியிருக்கிறோம். எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா, விலையில்லா அரிசியை வழங்கினார். அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றி உள்ளார்.
Recommended Video

நான் கூட தலைமை ஏற்கலாம்
தஞ்சாவூர் மாவட்டம் தனிப்பட்ட ஒருவருக்கானது மட்டுமல்ல. அ.தி.மு.க தொண்டனுக்கான இயக்கம். இந்த இயக்கத்தினுடைய பலமே தொண்டர்கள் தான். அதிமுகவிற்கு யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். ஒருவேளை நாளைக்கு இந்த காமராஜ் தலைமை ஏற்கலாம். அல்லது யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications