ஒரத்தநாடு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
தஞ்சாவூர்: பாப்பாநாடு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். சிறார்கள் 2 பேர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது இளம் பெண்ணை, அவரது ஆண் நண்பர், 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடா்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் (25), திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 4 பேருடன், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
அதன் அடிப்படையில், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவனை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, வேல்முருகன் திருச்சி மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவரும், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் வேறு யாரும் வருகிறார்களா என்று கண்காணித்து குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாப்பாநாடு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அளித்த பரிந்துரையின் பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications