மணமேடையில் இருக்க வேண்டிய மாப்பிள்ளை பிரச்சாரத்தில்... தஞ்சையில் நடந்த ருசிகர நிகழ்வு..!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மணமேடையில் இருக்க வேண்டிய மாப்பிள்ளை ஒருவர், போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணக்கோலத்தில் மாப்பிள்ளை திடீரென திருமண மண்டபத்தை விட்டு புறப்பட்டு சென்றது, அங்கிருந்த உறவினர்களை சற்று நேரம் பதற்றம் அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்வின் பின்னணியை இங்கே பார்க்கலாம்.

போதைப் பொருட்கள்
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 -ம் தேதி நேற்று தொடங்கிய இந்த பிரச்சாரம் அக்டோபர் 12 -ம் தேதி வரை அதாவது 10 நாட்களுக்கு முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்திருப்பதோடு தங்கள் இயக்கத்தை சேர்ந்த தோழர்களும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பரபரப்பு
இதனிடையே தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
பிரச்சாரம் இன்று நடைபெற்றது. அதில் ஜகுபர் சாதிக் என்ற புதுமாப்பிள்ளை திருமணக் கோலத்தில் கலந்துகொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். மணமேடைக்கு செல்வதற்கு முன்பாக பொதுமேடைக்கு மாப்பிள்ளை சென்ற நிகழ்வு திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புது மாப்பிள்ளை
புது மாப்பிள்ளை ஜகுபர் சாதிக்கின் இந்த செயல் பெண் வீட்டார் மத்தியில் டென்ஷனை உண்டாக்கினாலும் கூட, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை தனது திருமணத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அந்த புது மாப்பிள்ளையை அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அழைத்து பாராட்டியிருக்கிறார்.

இளைஞர்கள்
மது, கஞ்சா, புகையிலை, உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்றைய இளைஞர்களின் உடல்நலனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பல குடும்பங்களை சீரழிக்கவும் செய்துவிட்டது. இந்தச் சூழலில் அவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை என்பது அவசியம் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications