டெல்டாவில் கண் வைக்கும் டிடிவி தினகரன்? எம்.பி தேர்தலில் போட்டி? அவரே சொன்ன தகவல் இதோ!
தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் லோக்சபா தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து தினகரனே விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. தேர்தலை எதிர்கொள்ள வலுவான கூட்டணியை அமைப்பதில் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில், ஆளும் திமுக, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் பாஜக பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், வலுவான கூட்டணியில் இணையத் திட்டமிட்டு வருகிறார். ஆனால், இதுவரை யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பாஜக கூட்டணியில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் உடனும் இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறார் தினகரன்.
இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாக கூறுவது யூக அடிப்படையிலான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லலை.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருந்தார் டிடிவி தினகரன். இந்நிலையில் தான், அவர் லோக்சபா தேர்தலில் தஞ்சையில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்காக பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத் தொகுதி வாரியாக அமமுக பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications