காலை 9 டூ இரவு 7.30 மணி வரை.. பாபநாசம் தொகுதியில் ஒரே நாளில் 40 நிகழ்ச்சிகள்! சலிக்காத அன்பில் மகேஷ்
தஞ்சாவூர்: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவின் சொந்த தொகுதியான பாபநாசத்தில் ரூ.8.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்துள்ளார்.
காலை 9 மணிக்கு கார் ஏறிய அமைச்சர் அன்பில் மகேஷும், பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் இரவு 7.30 வரை பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். ஒரே நாளில் 40 கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இது குறித்து மநிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள முகநூல் பதிவு வருமாறு;
''அக்டோபர் 16ஆம் தேதி எனது பாபநாசம் தொகுதியின் வரலாற்றில் ஒரு சிறப்பிற்குரிய நாள். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூபாய் 8.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி, நியாய விலை கடைகள், பள்ளி கட்டிடங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள், வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள், கால்நடை மருந்தகங்கள், கிராம செயலகங்கள், துணை சுகாதார நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என 40 கட்டடங்கள் இன்று ஒரே நாளில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ''
''முதலமைச்சரின் வழிகாட்டலில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டடங்களை திறந்து வைத்தார். காலை 9.00 மணிக்கு அம்மாபேட்டை ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சியில் தொடங்கி இரவு 7.30 மணிவரை பாபநாசம் ஒன்றியம் கொந்தகை ஊராட்சியில் 40 வது கட்டடத்தின் திறப்பு விழாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.''
''இந்த நிகழ்வுகளில் அமைச்சருடன் நானும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் - வளர்ச்சிஸ்ரீ காந்த் இ.ஆ.ப., தமிழக அரசின் தலைமைக் கொறடா முனைவர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு. சு.கல்யாணசுந்தரம், மு.சண்முகம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் .ராமலிங்கம், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். '' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications