பெட்ரோலுடன் தண்ணீர்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளை கலங்கடித்த பெட்ரோல் பங்க்.. என்ன நடந்தது?
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வினியோகிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்ற வாகனங்கள் எல்லாம் சிறிது தூரம் சென்ற பின் பழுதாகி நின்றதால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் - கும்பகோணம் முக்கிய சாலையில் திருவலஞ்சுழி பகுதியில் எச்பி பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கை எம்கேவி என்ற ஏஜெண்ட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று காலையிலும் இந்த பெட்ரோல் பங்கில் வழக்கம்போல் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது தூரம் சென்ற பின் இருசக்கர வாகனங்கள் திடீரென பழுதாகி நின்றுள்ளது. ஏன்? எதனால்? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் இப்படி தவித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு வாகன ஓட்டிகளாக அந்த சுற்றுவட்டாரப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு இப்படி பழுதாகி நின்ற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து பழுதாகி நின்ற 20-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அந்த பெட்ரோல் பங்கிற்கே வந்தனர். தொடர்ந்து இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அங்கு கூடியிருந்த வாகன ஓட்டிகள் வாட்டர் கேனில் பெட்ரோலை நிரப்புமாறு கூறி அதனை வீடியோவாகவும் எடுத்தனர்.
இதில் வாட்டர் கேனில் வந்த பெட்ரோலில் பாதி தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு கூறினர். ஆனால் பங்க் நிர்வாகத்தினர் இதற்கு சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல் பங்க்கில் பரபரப்பு ஏற்பட்டது.
பலரும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று வாகனத்துடன் தவித்ததாகவும், வாகனத்தில் என்ன பிரச்சினை என்று தெரியாமல் மன உலைச்சலுக்கு ஆளானதாவும் கூறினர். இதற்கிடையே சுவாமிமலை போலீசார் அங்கு வந்தனர். போலீசார் வாகன ஓட்டிகளிடமும், பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினரிடமும் இது பற்றி முழுமையாக கேட்டறிந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications