தஞ்சை பெரிய கோயில் நந்தி சிலையில் விரிசல்.. பக்தர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மிகப் பெரிய நந்தி சிலையின் பின்புறம் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சையில் உள்ளது பெரிய கோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் மிகப் பெரிய நந்தியம் பெருமான் சிலை அமைந்துள்ளது. மாதந்தோறும் பிரதோஷத்தின் போது சிவனுக்கு செய்வது போல் நந்திக்கும் பிரதோஷ வழிபாடு நடைபெறும்.
மேலும் அபிஷேகமும் செய்யப்படும். இதற்காக திரளான பக்தர்கள் கூடி சிவனையும் நந்தியையும் வழிப்பட்டு செல்வர். இந்த நிலையில் நேற்றைய தினம் சிலையின் பின்புறம் திடீர் என விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொன்னியின் செல்வன்.. ராஜராஜ சோழனின் சதய விழா.. விழாக்கோலம் பூண்ட தஞ்சை!
தொல்லியல் துறை
இதனை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவன் கோயில்களில் விநாயகரை வணங்கிய பிறகு நந்தி பகவானை வணங்கிய பின்னரே சிவனை வணங்க செல்வது வழக்கம்.
கலைநயம்
இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிறைந்துள்ள பல்வேறு கலைநயமிக்க அமைப்புகள்தான் காரணம். இந்த கோயிலின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது பெருவுடையாருக்கு முன் அமைந்துள்ள பெரிய நந்திதான். ராஜராஜசோழனின் ஆளுமைத் திறனும் அவரின் இறைப்பணியும் இந்த கோயிலின் பெருமையை மேலும் விளக்கி சொல்கிறது.
நந்தி சிலை
இந்த நந்தி சிலை ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது அல்ல என்றும் நாய்க்கர் மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டதாகும். தஞ்சை மன்னர்கள் சிவலிங்கத்திற்கு அடுத்து நந்தியை வழிப்பட்டு வந்துள்ளனர். இந்த நந்தி சிலைக்கு பிரதோஷத்தின் போது பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
சனிப்பிரதோஷம்
மாதத்தில் வரும் சனிப்பிரதோஷமும் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்திலும் அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்படும். அது போல் மாட்டு பொங்கல் பண்டிகையின் போது பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெறும். அப்போது நந்தி பகவானுக்கு டன் கணக்கில் காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்படும். இத்தனை சிறப்புகளை கொண்ட நந்தியின் சிலையில் விரிசல் விட்டுள்ளது.
சீரமைப்பு
இதை தொல்லியல் துறை விரைந்து சீரமைப்பதோடு இந்த விரிசலுக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். கட்டடகலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு தஞ்சை பெரிய கோயிலும் ஒன்று. இந்த கோயிலின் கோபுரத்தின் நிழல் தரையில் படாதவண்ணம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.