களத்தில் மோதல்.. நேரில் பாசம்.. வேட்பாளர்கள்-னா இப்படி இருக்கணும்! கொடுத்து வச்ச மக்கள்
தஞ்சை: பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக, தமாகா வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறியுள்ளனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, மறந்தும் கூட இரு கட்சி நிர்வாகிகள் சந்தித்துக் கொள்ளமாட்டார்கள்.
ஒரு திமுக நிர்வாகி, கட்சிக்கு வெளியே ஒரு அதிமுக நிர்வாகியுடன் நட்பாக இருப்பார், ஏன் சொந்தக்காரராக கூட இருப்பார். ஆனால், இருவரும் சுக, துக்க நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாது. அந்தளவுக்கு தலைமை ஸ்ட்ரிக்டாக இருக்கும். இதில், கலைஞரை விட ஜெயலலிதா ஒருபடி கூடுதல் கண்டிப்புடன் இருப்பார். இப்போது இவ்விரு தலைவர்களும் இங்கில்லாத சூழலில், தமிழகத்தில் கூட டெல்லி பாலிடிக்ஸ் அணுகுமுறை உருவாவதை காண முடிகிறது.

32 வருடங்களுக்கு பிறகு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக கே.அண்ணாதுரை களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 1989ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அண்ணாதுரை, 32 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் சீட் வாங்கியுள்ளார். இதனால் இவர் மீது இங்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் என்.ஆர்.ரங்கராஜன் இங்கு போட்டியிடுகிறார்.

நலம் விசாரிப்பு
இந்நிலையில், இருவரும் நேற்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இருவரும் வெவ்வேறு நேரங்களில் வந்தாலும், அங்கு நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனும், திமுக வேட்பாளர் அண்ணாதுரையும் கைகளைப்பற்றி, பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

கைத்தட்டல்
உடல்நிலை குறித்தும், குடும்பம் குறித்தும் இரு எதிர்தரப்பு வேட்பாளர்களும் அக்கறையுடன் விசாரித்துக் கொண்டது ரசிக்கும்படி இருந்தது. இத்தனைக்கும், இரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரும் அங்கு சூழ்ந்து இருந்தனர். இரு வேட்பாளர்களும் அங்கு கைக்குலுக்கிய போது, தொண்டர்கள் கைத்தட்டல் எழுப்பினர். பலர் ஃபோட்டோக்கள் எடுத்தனர்

மக்கள் வரவேற்பு
அனைத்துக்கும் மேல், இருவரும் ஒருவருக்கொருவர் தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். நேருக்கு நேர் மோதும் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் இருவர், நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது பட்டுக்கோட்டை தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications