என்னையா அடிக்க வர்றீங்க.. திருவையாறு பஜாரில் டிராபிக் ராமசாமி ஆவேசம்
டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சிகள் தாக்க முயன்றனர்.
திருவையாறு: கடைவீதியில் டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் சிலர் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதனை உள்ளே நுழைந்து அதை சீர்படுத்துவதுதான் டிராபிக் ராமசாமியின் வழக்கம். அதனால்தான் இந்த டிராபிக் என்ற பெயரே அவருக்கு கிடைத்தது.
அதேபோல, எங்கு சட்டவிரோதமாக பேனர்களை வைத்தாலும் அதனை அகற்ற போராடியும் வருகிறார். இதற்காக பல வழக்குகளை பல கட்சிகள் மீது தொடுத்துள்ளார். வக்கீல்கள் யாரும் வராவிட்டாலும் தன் பக்க நியாயத்தை இவர் ஒருவரே வாதாடிவிடுவார்.

கோர்ட் உத்தரவு
சமீபத்தில்கூட இவர் தொடுத்த பேனர்கள் வழக்கில், மாநகராட்சியை கோர்ட் கடிந்து கொண்டதுடன், சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

ராமசாமி ஷாக்
இந்நிலையில், திருவையாறு பகுதிக்கு டிராபிக் ராமசாமி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவையாறு கடைவீதியில் நிறைய அரசியல் கட்சிகளின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் ஷாக் ஆன டிராபிக் ராமசாமி காரை விட்டு அவசர அவசரமாக இறங்கினார்.

செல்போனில் படம்
பின்னர் பேனர்கள் பக்கத்தில் நின்று கொண்டு, தனது செல்போன் மூலம் அதனை படம் எடுத்து கொண்டு இருந்தார். டிராபிக் ராமசாமி இப்படி வந்து படம் பிடிக்கும் சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. உடனடியாக போலீசாரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட்டனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களை வேகமாக அகற்ற ஆரம்பித்தனர்.

கட்டைகள், கம்புகள்
அதனை கண்ட டிராபிக் ராமசாமி, வெறும் பேனர்கள் மட்டும் போதாது, அருகில் மேலும் பேனர்கள் வைக்க தயாராக இருந்த கட்டைகள், கம்புகள் எல்லாவற்றையும் சேர்த்து அப்புறப்படுத்துங்கள் என்றார். இதைக் கேட்ட பேரூராட்சி நிர்வாகத்தினரும் அவற்றையும் எடுத்து கொண்டிருந்தனர்.

தாக்க முயன்றனர்
அந்த நேரம் பார்த்து ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அங்கு வந்து, டிராபிக் ராமசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். வாக்குவாதம் தகராறாக மாறியது. தகராறு கொஞ்ச நேரத்தில் முற்றியதில், கட்சி பிரமுகர்கள் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு போலீசாரர், டிராபிக் ராமசாமியை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றினர்.

டிராபிக் ராமசாமி ஆவேசம்
அப்போது டிராபிக் ராமசாமி, "என்னையா அடிக்க வர்றீங்க? கொலை செய்றேன்னு சொல்றீங்க? என்னை அடிக்க வந்தவங்க மீதும், கொலை செய்றேன்னு சொன்னவங்க மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட்ல கேஸ் போட போறேன்" என்று ஆவேசமாக சொல்லிவிட்டு கிளம்பினார். இதனால் கடைவீதியே பரபரப்பாகி விட்டது.












Click it and Unblock the Notifications