தஞ்சாவூர் தேர் விபத்து... சாலை விரிவாக்க பணி தான் காரணமா? உண்மை என்ன? பரபரப்பு பின்னணி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் களிமேடுவில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட தேர் விபத்தில் 11 பேர் இறந்தனர். இந்த விபத்துக்கு சமீபத்தில் மேற்கொண்ட சாலை விரிவாக்க பணியும், 2 அடி உயர்ந்த சாலையும் தான் காரணம் என கிராம மக்கள் சோகமாக கூறினர்.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் கேவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாத தேர்விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து 3 நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக துவங்கியது. நேற்று இரவு 10 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது.

மின்சாரம் தாக்கி 11 பேர் பலி
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள தேர் பவனி துவங்கியது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தது. உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

முதல்வர் விரைவு
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை தான் காரணமா?
இந்நிலையில் தான் சாலை விரிவாக்க பணியின் காரணமாக தான் தேர் விபத்து நடந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருத்தப்பட்டனர். இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், ''விபத்து நடந்த இடத்தில் முதலில் சாலை குறுகலாகவே இருந்தது. கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் 2 அடி வரை சாலை உயர்த்தப்பட்டது. ஊரை சுற்றிவிட்டு கடைசியாக கோவிலுக்கு திரும்பும்போது சாலைக்கு மேல் உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது.

மின்கம்பி மாற்றாதது தானா?
தேரை இழுத்தவர்கள் தேரை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது. இதனால் மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்ப முடியாமல் சாலை தான் அகலமாக உள்ளதே என்று சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்தனர். அப்போது தேரின் உச்சியில் இருந்த கும்பம் மின் அழுத்த கம்பியில் உரசியது. சாலையில் கவனம் கொண்டு தேரை திருப்பிய நிலையில் எதிர்பாராதவிதமாக தேர் உச்சியில் மின்கம்பி உரசி விபத்து ஏற்பட்டது. மின் கம்பியை சாலை ஓரத்திலேயே மாற்றி அமைத்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது'' என்றனர்.












Click it and Unblock the Notifications