யாரு எடப்பாடியா.. அப்படியா? அது என்ன வித்தியாசமாம்? எனக்கு எதுவும் தெரில?.. சசிகலா கிண்டல்
தஞ்சை: நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறித்து சசிகலாவிடம் கேட்ட போது அவர் ஒரு பதிலை கூறியிருக்கிறார்.
அதிமுக யாருக்கு என்ற போட்டியில் அதிக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். ஓபிஎஸ் நம்பிக்கையுடன் சென்ற நீதிமன்றங்களிலும் கூட எடப்பாடி பழனிசாமியே வெற்றிக் கண்டார்.
இந்த நிலையில் அதிமுகவை சசிகலாவின் உதவியுடன் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் ஓபிஎஸ் இருந்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா தற்போது தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் செய்து வருகிறார்.
ஹய்யய்யோ.. சசிகலா புஷ்பா வீடியோ..
தஞ்சையில் சசிகலா
தஞ்சையில் சசிகலா உள்ள நிலையில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவரது திருவுருபப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை வெற்றிக்கு எடுத்துச் செல்வார்கள்.
அதிமுக
அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலில் வெற்றி பெறும். போகும் இடங்களில் எல்லாம் மக்களே சொல்கிறார்கள். சொன்ன திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் இவர்கள் நிறுத்துவது நல்லதல்ல என்றார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருந்தாரே அது குறித்து சொல்லுங்கள் என சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஓபிஎஸ் சரியாகத்தான் சொல்லியிருக்காரு
அதற்கு அவர் கூறுகையில் , ஓபிஎஸ் சரியாகத்தான் சொல்லியிருக்காரு. எங்கள் தொண்டர்களின் வெளிப்பாடும் அதுதான். பண்ருட்டி ராமசந்திரன் எங்கள் கட்சியின் முன்னோடி அவரை ஓபிஎஸ் பார்த்ததில் தவறு இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. அது பற்றி நாம் எதையும் சொல்ல முடியாது.
எனக்கு தெரியவில்லை
அதிமுக என் தலைமையில் வழிநடத்த வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்றார் சசிகலா. நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளாரே அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என சசிகலாவிடம் கேட்ட போது அப்படியா.. அது என்ன வித்தியாசம் என நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரியவில்லை என்றார்.