அவசரபுத்தி அரசியலுக்கு ஆகாது...சசிகலா சொன்ன குரங்குக் குட்டி கதை யாருக்கு?
நம் செயல் வெற்றி பெற வேண்டும் என்றால் பொறுமையுடன் கூடிய முயற்சி வேண்டும் என குரங்கின் கதையைச் சொல்லி அதிமுகவை மீட்டு எடுப்பதாக சூசகமாக பேசினார்
தஞ்சாவூர்: அவசரப்பட்டால் அரசியலில் ஜெயிக்க முடியாது பொறுமையும் நிதானமும் தேவை என்று சசிகலா கூறியுள்ளார். குரங்கின் அவசர புத்தி பற்றி குட்டிக்கதை ஒன்றை தனது ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார் சசிகலா.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய சசிகலா அதிமுகவை மீட்கப்போவதாக கூறினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம் எதிர்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
திருமண விழாவில் பேசிய சசிகலா இன்று திடீரென குட்டிக்கதை ஒன்றை சொன்னார். குரங்கு ஒன்று மாங்கொட்டையை உடைத்து வைத்து மரம் பலரும் மாம்பழம் சாப்பிடலாம் என ஆசைப்பட்டு தினந்தோறும் மாங்கொட்டையை எடுத்துப் பார்த்தது. மாமரம் வளரவில்லை, குரங்கின் ஆசை நியாயம் என்றாலும் அதன் அவசரப் புத்தி நியாயமானதல்ல காலம் என்ற நியதி இல்லாமல் எந்த செயலும் நிறைவேறுவதில்லை விதை ஊன்றி நீருற்றி சிலகாலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நம் செயல் வெற்றி பெற வேண்டும் என்றால் பொறுமையுடன் கூடிய முயற்சி வேண்டும் என குரங்கின் கதையைச் சொல்லி அதிமுகவை மீட்டு எடுப்பதாக சூசகமாக பேசினார். நல்லதே நடக்கும் என்று சொல்லி கதையை முடித்தார் சசிகலா.
பொதுவாக அரசியல்வாதிகளோ, சினிமா பிரபலங்களோ இப்போது குட்டிக்கதை சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஜெயலலிதா பேசும் போது பெரும்பாலும் குட்டிக்கதை சொல்வார். அந்த பாணியை இப்போது சசிகலாவும் பின் தொடர ஆரம்பித்து விட்டார்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஒ.பன்னீர் செல்வம், பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை சொன்னார். தொடர்ந்து பேசிய அவர், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று கூறி பரபரப்பை பற்ற வைத்தார். மன்னிப்பு என்பது சசிகலாவிற்காக சொல்லப்பட்டதா என்று பேசப்பட்டது. இந்த நிலையில் சசிகலா இன்றைய தினம் குட்டிக்கதை ஒன்றை கூறி அரசியலில் புதிய விவாதத்தை தொடக்கி வைத்துள்ளார்.