நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு.. கண் கலங்கிய மக்கள்.. அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட சீமான்!
புயல் பாதித்த மக்களுடன் அமர்ந்து சீமான் மதிய உணவு சாப்பிட்டார்.
தஞ்சை: வெட்ட வெளியில் பொதுமக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சீமான்!!
கஜா பாதித்த முக்கிய டெல்டா பகுதிகளுள் தஞ்சையும் ஒன்று. அரசு உட்பட தனியார் அமைப்புகள் வரை ஏராளமானோர் பல்வேறு உதவிகளை தஞ்சை மாவட்டத்துக்கும் செய்து வருகிறார்கள். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவட்டம் மீண்டு வருகிறது என்றாலும், இன்னும் நிவாரண உதவிகள் உட்பட சாப்பாடு வரை பொதுமக்கள் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பேசும்போது, மனம் உடைந்து போயுள்ள தென்னை உள்ளிட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தனது உரையை அளித்தார்.
அன்னதானம்
சீமானின் ஊக்கமளிக்கும் இந்த பேச்சிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்தபிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழை இலை
மில் வளாகம் ஒன்றில் இந்த அன்னதான நிகழ்ச்சி தயாரானது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். எல்லோருக்கும் அந்த வளாகத்தில் வாழை இலை போடப்பட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது.
மக்களுடன் சாப்பிடுகிறேன்
அப்போது சீமானும் சாப்பிட வந்தார். அவருக்கு தனியாக இடம் ஒதுக்கி அங்கே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்கார சொன்னார்கள். ஆனால் சீமான் அதை மறுத்து, மக்களுடனே உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டார்.
சாப்பாடு பரிமாற்றம்
வரிசையாக உட்கார்ந்திருந்த பொதுமக்களுடன் சேர்ந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். பிறகு அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. சீமான் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
|
நல்ல சாப்பாடு...
இதனை இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சுப்பா.." என கலங்கிய எங்கள் பகுதி மக்களுக்காக 3000 பேருக்கு மதிய விருந்து தயாரித்து, அதில் சீமானை பங்கேற்க செய்து, மனதையும் வயிறையும் ஒருசேர நிறைய வைத்த சூரியா, கார்த்தி ரசிகர் மன்றத்தினருக்கு கோடி நன்றி. இவர்கள் ரசிகர்கள் அல்ல, நற்பணியாளர்கள்!" என்று கூறியுள்ளார்.