டாஸ்மாக்கை மூடுவது சுலபம் இல்லை.. ஐஏஎஸ் ஆனவர்கள் கூட.. டக்கென டோனை மாற்றிய திருமாவளவன்
தஞ்சை: டாஸ்மாக்கை மூடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. மது மிகப்பெரிய லாபம் தரக்கூடிய தொழில். உணர்வுப்பூர்வமான செயலில் நாம் கை வைத்துள்ளோம். சிரமப்பட்டு படித்து ஐஏஎஸ் ஆன சிலர் கூட தற்போது சாராயம் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.
தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டிலும் வெற்றி பெற்றது. திருமாவளவன் எம்பியாக உள்ளார்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பாஜக, பாமக தவிர இதர கட்சிகள் வரலாம் என பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதும், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், டாஸ்மாக்கை மூடுவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. சிரமப்பட்டு படித்து ஐஏஎஸ் ஆன சிலர் கூட தற்போது சாராயம் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார். இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:- திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது. ஆனால் சிலர் இதனை பெரிது படுத்துகிறார்கள்.
மதுவிலக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. எங்கள் நோக்கத்தில் எவ்வித களங்கமும் இல்லை. மது ஒழிப்பு மாநாட்டை சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். மதுவிலக்கு என்பது அனைவருக்குமான பிரச்சினை. இந்த மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்து இருக்கிறோம். இந்த மாநாட்டில் பங்கேற்பதும், பங்கேற்காததும் அவரவர்கள் விருப்பம்.
நாங்க எல்கேஜி தான், பாமக பிஎச்டி தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சில கசப்பான அனுபவங்களால் சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு எங்களை பாமகவினர் தள்ளிவிட்டனர். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாமகவை இழிவுபடுத்துவது எங்களது நோக்கம் கிடையாது. ஒருவர் மட்டும் சொல்லி மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. படிப்படியாக தான் அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக்கை மூடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. மது மிகப்பெரிய லாபம் தரக்கூடிய தொழில். மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டிருக்கிறது. கஷ்டப்பட்டு படித்து ஐஏஎஸ் ஆகும் சிலர் கூட தற்போது சாராயம் விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொன்னால் அதனை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்கள் நம்மை எதிரிகளாக பார்க்கிறார்கள். எனவே உணர்வுப்பூர்வமான செயலில் நாம் கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில், 'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று திருமாவளவன் பேசிய வீடியோ பதிவிடப்பட்டது. பின்னர் டெலிட் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் பதிவிடப்பட்டு டெலிட் செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இதனை அட்மின் தான் செய்திருப்பார் என்று தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் அந்த வீடியோவை மீண்டும் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இத்தகைய சூழலில் நாளை முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திந்து பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications